கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. பின்னர் கடந்த மாதம் வீரர்கள் பயிற்சிகளுக்குத் திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில், தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள பெங்களூரு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில், இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள், முக்கிய அலுவலர்களுடன் நடத்திய ஆலோசனையின் படி, வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஹாக்கி வீரர்கள் தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தில், தங்களது பயிற்சிகளை மேற்கொள்வர். அதேசமயம் கரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு வீரர்களும், பூரண குணமடைந்ததும் பயிற்சியில் இணைந்து கொள்வார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.