ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் எரிக் முதல் கோலை அடித்தார். பின்னர், ஜெர்மனி வீரர்கள் ஆரேன், முல்லர் முறையே 21, 24 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.
இதனால் 3-0 என்ற பின்னடைவைக் கண்ட இந்தியா தோல்வியை நோக்கி பயணத்தது. இந்நிலையில், ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தம் சிங் அணிக்கு முதல் கோலை அடித்தார். ஆனால் அடுத்த நில வினாடிகளில் ஜெர்மனி வீரர் கிரிஸ்டோபர் மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இந்திய வீரர் பாபி சிங் அணிக்கு ஆறுதல் கோல் ஒன்றை அடித்தார். இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி இந்தியாவை வீழ்த்தியது.
இதையடுத்து நடப்பு சாம்பியனான இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா அணி பிரான்சை எதிர்கொள்கிறது. கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: IND vs NZ: ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்; அசத்திய அஜாஸ் படேல்