தற்போதைய கால்பந்து வீரர்களில் உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளவர் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தவிர்த்து சில தொழில்களும் செய்து வருகிறார். அந்த வகையில் லிஸ்பானில் இவருக்கு இரு நட்சத்திர ஹோட்டல்கள் உண்டு. அதனை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவம் செய்வதற்காக தற்காலிக மருத்துவமனையாக மாற்ற ரொனால்டோ தயார் என அறிவித்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை கால்பந்து வீரர் ரொனால்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து ஹோட்டல் தரப்பில், ''எங்களுடைய ஹோட்டலை மருத்துவமனையாக மாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை'' எனத் தெரிவித்தனர். இதுவரை போர்ச்சுகலில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுவண்டஸ் அணி வீரர் ருகானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், ரொனால்டோ மடைராவில் இருக்கிறார். கொரோனா வைரஸ் பற்றி அவர் பேசுகையில், '' மிகவும் கடினமான சூழலை உலகம் எதிர்கொண்டுள்ளது. அனைவரும் பாதுகப்புடன் எதிர்கொள்வோம். இதனை நான் கால்பந்து வீரராக கூறவில்லை. ஒரு மகனாக, அப்பாவாக, மனிதனாக கூறுகிறேன்.
உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட ஆலோசனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மற்ற எந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தாமல், மனிதத்துடன் உயிர்களைக் காப்பாற்றுவோம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எங்கள் அணியின் ருகானி நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: செல்சீ வீரர் ஹட்சன் ஒடோய்க்கு கொரோனா பாதிப்பு!