பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே. இவர் கடந்த போட்டியில் பிரெஞ்சு லீக் போட்டியில் நாண்டஸ் அணிக்கு எதிராக ஆடியபோது 74ஆவது நிமிடத்தில் ஓய்வறைக்குத் திரும்பினார். இதைப்பற்றி பயிற்சியாளர் தாமஸ் கூறுகையில், எம்பாப்பே ஓய்வறைக்கு வரவழைக்கப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மட்டும்தான் என்றார்.
அந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நிர்வாகம் தரப்பில், எம்பாப்பே காயத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அதனால் அவர் ஜெர்மனி பயணத்தில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாண்டஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோலுக்கு அசிஸ்ட் செய்து வெற்றிக்கு பங்களித்ததோடு, ஒரு கோல் அடித்தும் அசத்தினார். அந்தக் கோலுடன் சேர்த்து இந்தத் தொடரில் ஏழு கோல்களை அடித்துள்ளார்.
இவர் லெய்ப்ஷிக் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாததால், பிஎஸ்ஜி அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நெய்மர், மார்க்கோ, மவுரோ, ஜூலியன் ஆகியோர் பிஎஸ்ஜி அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெல்வதற்காக தான் ஆடினோம், ரன் ரேட்டுக்காக அல்ல: ஸ்ரேயாஸ் ஐயர்