ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணிக்கு நீண்ட நாட்களாக தலைவலியாக இருப்பதே நான்காவது வரிசை பிரச்னைதான். அம்பதி ராயுடு முதல் ரிஷப் பந்த் வரை பல்வேறு பேட்ஸ்மேன்கள் அந்த வரிசையில் களமிறங்கியும் சோபிக்கவில்லை.
இதனிடையே, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 81 ரன்கள் விளாசி மிரட்டினார். இவரது ஆட்டத்தைக் கண்டு நெட்டிசன்கள், நான்காவது வரிசை பிரச்னையை இவர் தீர்த்துவைப்பார் என கருத்துத் தெரிவித்தனர்.
இதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், உள்ளூர் போட்டிகளில் அதிகமாக ரன்கள் அடித்தும் சூர்யகுமார் யாதவ் ஏன் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகவில்லை எனத் தெரியவில்லை. தொடர்ந்து கடினமாக உழைப்பை வெளிப்படுத்துங்கள், அதற்கான பலன் நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு கிடைக்கும் என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கவலப் படாதீங்க ஃபிரெண்ட் உங்களுக்கான டைம் சீக்கிரம் வரும்... சூர்யகுமார் யாதவ் குறித்து ஹர்பஜன் சிங்!
இந்நிலையில், இவரது பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில், இந்திய அணிக்கு நெ.4இல் பேட்டிங் செய்ய வீரர் தேவையே இல்லை ஹர்பஜன். நமது டாப் ஆர்டர் பேடஸ்மேன்களே வலுவாக உள்ளனர் என கிண்டலாக ரீ-ட்விட் செய்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோரை நம்பியே இருந்தது, இப்பவும் இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல, இவர்களும் அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளனர். அதேசமயம், நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய பிசிசிஐ குறிப்பிட்ட வீரருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காமல், பல வீரர்களை சோதித்து பார்த்ததன் விளைவைதான் பிசிசிஐ தற்போது சந்தித்துவருகிறது. இந்த பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.