அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் உலகம் முழுவதும் #BlackLivesMatter என்ற வாசகத்துடன் அடையாளப்படுத்தப்பட்டது. இதனால் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனொரு பகுதியாக நிறவெறி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்பந்து கிளப்புகள் முடிவுசெய்தன. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter என்ற வாசகத்துடன் அனைத்து அணிகளும் போட்டிகளுக்கு முன்பாக வலியுறுத்தின.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளின்போது #BlackLivesMatter போராட்டம் ஆதரவளிக்க ஐசிசி அனுமதியளித்துள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது ஜெர்சியில் #BlackLivesMatter லோகோவுடன் களமிறங்கவுள்ளனர்.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் பேசுகையில், ''மக்களிடையே ஒற்றுமை, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இப்போது இளைஞர்களாகிய எங்களிடம் இருக்கிறது.
இந்த முடிவை நாங்கள் சாதாரணமாக நினைக்கவில்லை. நிறத்தை வைத்து மக்கள் எங்களை என்னவாக முடிவு செய்கிறார்கள், எங்களால் உணர முடியும். இது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லா மக்கள் மத்தியிலும் சமத்துவமும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். அது மக்களிடம் சென்று சேரும்வரை, நாங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான தருணம் இது. விஸ்டன் டிராபியை தக்கவைப்பதற்காகத்தான் இங்கிலாந்து வந்துள்ளோம். ஆனால் உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுள்ளோம். அதனால் சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காகப் போராட தயாராகவே உள்ளோம்'' என்றார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் தொடர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'எனக்குக் கரோனா தொற்று இருப்பதாக நினைத்தேன்' - ஜாக் லீச்