1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று, இந்திய கிரிக்கெட்டை சர்வதேச அரங்கில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை அமைக்க உதவியது.
ஆனால் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை, தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுடைய சம்பளத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் கூட, உங்களால் நிச்சயம் அதனை நம்ம முடியாது.
இதுகுறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்று தெளிவாக விளக்குகிறது. 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பின் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

அப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் மற்றும் மேலாளர் ஆகியோரது சம்பளம் குறித்தான புகைப்படம் தன் சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகத் தொடங்கியுள்ளது.
அதில் 1983 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணமாக ரூ.1500, ஒரு நாளுக்குகான ஊக்கத்தொகை ரூ. 200, என ஒவ்வொரு வீரருக்கும் மேலாளருக்கும் ரூ .2,100 மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதுள்ள இந்திய அணியின் வீரர்களுடன், இந்தச் சம்பளத்தை ஒப்பிட்டு பார்த்தால், அது மிகப்பெரும் வித்தியாசத்தை காட்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை. தற்போது பிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்தப் படி 'ஏ+' வீரர்களுக்கு ரூ.7 கோடியும், 'ஏ' பிரிவினருக்கு ரூ.5 கோடியும், 'பி'பிரிவினருக்கு ரூ.3 கோடியும், 'சி' பிரிவினருக்கு ரூ. 1கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஒருநாள் சம்பளமாக ரூ.6 லட்சமும், டி20 கிரிக்கெட் போட்டிக்கு ரூ.3 லட்சமும், டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சமும் வீரர்களின் போட்டி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஏன், ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படுகிறது. மேலும் அந்த வீரர்களின் ஒரு போட்டிக்கான சராசரி சம்பளமாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

கிரிக்கெட் இப்போது இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் ஒரு வணிக விளையாட்டாக மாறியுள்ளது. இப்போதெல்லாம், இந்தியன் பிரீமியர் லீக் முதல் தொலைக்காட்சி விளம்பரங்கள் வரை பல அம்சங்களால் வீரர்கள் நிறைய சம்பளம் பெறுகிறார்கள்.
ஆனால் 1983 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாமல் இருந்திருந்தால், தற்போதுள்ள வீரர்களின் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடருக்கு முன் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்?