ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் இரண்டு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றன. இதில் கலந்துகொள்ள ஏற்கனவே பத்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள அணிகளைத் தேர்வு செய்வதற்காக தற்போது தகுதிச் சுற்றுப்போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பங்கேற்றுள்ளன. இதிலிரண்டுப் பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும். பின்னர் இரண்டு, மூன்று, நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பிளே-ஆஃப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு நடைபெறும்
இதில் நேற்றையப் போட்டியில் கென்யாவை எதிர்கொண்ட பப்புவா நியூ கினியா அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றியுடன் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த பப்புவா அணி டி20 உலகக்கோப்பைக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.
கென்யாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பப்புவா அணியின் நார்மன் வனுவாவின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 118 ரன்களை எடுத்தது. அதன்பின் பந்துவீச்சிலும் மிரட்டிய பப்புவா அணி கென்யா அணியை 73 ரன்களுக்குச் சுருட்டியதால் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பி பிரிவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. அயர்லாந்து அணி நான்கு வெற்றியுடன் முதலிடத்தில் இருந்தாலும் அந்த அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவது நேற்றைய ஓமன் - ஜெர்சி அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவைச் சார்ந்திருந்தது.
ஆனால் நேற்றையப் போட்டியில் ஜெர்சி அணி ஓமன் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அயர்லாந்து அணி நெட் ரன்கள் அடிப்படையில் பி பிரிவில் முதலிடம் பிடித்து உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதிபெற்றது.