இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 176, மயாங்க் அகர்வால் 215 ரன்கள் குவித்து அசத்தினர். தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் கேசவ் மஹாராஜ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ரம் 5, தியூனிஸ் டி ப்ருயுன் 4, டேன் பீடெட் 0 என தொடர்ச்சியாக ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. டீன் எல்கர் 27 ரன்களுடனும் டெம்பா பவுமா இரண்டு ரன்களுடனும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டெம்பா பவுமா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 64 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.

அதன்பின் தொடக்க வீரர் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டூபிளஸ்ஸிஸ் நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டனர். டீன் எல்கர் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது.
எல்கர் 76 ரன்களுடனும் டூபிளஸ்ஸிஸ் 48 ரன்களுடனும் விளையாடிவருகின்றனர். அந்த அணி இந்தியாவைக் காட்டிலும் 349 ரன்கள் பின்தங்கியுள்ளது.
நிதானத்துடன் ரன்களை சேர்த்துவரும் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டூபிளஸ்ஸிஸ்-எல்கர் ஜோடியை இந்திய பந்துவீச்சாளர்கள் பிரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.