இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மைதானத்தில் ரசித்தனர். இந்தியாவிலும் தொலைக்காட்சி டிஆர்பி மகளிர் டி20 உலகக்கோப்பையின்போது விண்ணைத் தொட்டது. இதனால் அப்போதே சில ரசிகர்கள் மகளிருக்கு என ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.
தற்போது அதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். அதில், "மகளிருக்கான டி20 ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு தொடங்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. ஆடவர் போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும் விதிகளில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து, மகளிர் ஐபிஎல் தொடரைத் தொடங்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஆடவர் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேரை அனுமதித்த நிலையில், மகளிர் போட்டிகளில் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆறு பேரை அனுமதிக்க வேண்டும். இந்த வருடத்தில் ஐபிஎல் தொடர் நடந்தால் ப்ளே - ஆஃப் வாரங்களில் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் ஏழு போட்டிகளை நடத்த வேண்டும்.
நமது நாட்டில் உள்ளூர் வீராங்கனைகள் குறைந்த அளவிலேயே உள்ளனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஐபிஎல் உரிமையாளர்களாக இருப்பவர்கள் இந்த நடைமுறையைத் தொடங்க முன்வர வேண்டும். பிசிசிஐ-யால் நான்கு அணிகளை நிச்சயம் உருவாக்க முடியும்.
மகளிர் கிரிக்கெட்டை முன்னேற்ற ஏதாவதொரு புள்ளியில் தொடங்கியே ஆட வேண்டும். காலம் முழுவதும் காத்திருப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் நடந்தால், நிச்சயம் ஆடவர் போட்டிகள் போல் மகளிர் போட்டிகளும் பிரசித்திப்பெறும்'' என்றார்.
ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், மகளிர் ஐபிஎல் தொடரை 2021இல் தொடங்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு வேண்டுகோள்விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகம் பார்வையாளர்கள் கண்ட தொடராக மாறிய மகளிர் டி20 உலகக்கோப்பை