பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது புதிய தேர்வு குழு நியமித்தல், பிசிசிஐயின் புதிய துணைத்தலைவரை நியமித்தல், ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பதற்கு பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், கரோனா தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த அனைத்து முதல் தர வீரர், வீராங்கனைகளுக்கும் பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பிசிசிஐயின் துணைத்தலைவராக இருந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.சி.சியின் இயக்குநராக சவுரவ் கங்குலி தொடர்ந்து நீடிப்பதற்கும் பொதுக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து சில விளக்கங்களைப் பெற்றபின், ஒலிம்பிக்கில் டி 20 கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான ஐசிசியின் முயற்சியை ஆதரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!