பொதுவாக, ரொம்ப எதிர்பார்க்கிறது கிடைக்காம போனா யாரா இருந்தாலும் ஏமாற்றமும் வருத்தமும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். அப்படி, கிரிக்கெட்டை மதமாக பார்க்கும் ஒட்டுமொத்த இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்தது 2007 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரைத்தான்.
ஆனால், இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் அந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்ததுதான் மிச்சம். அதுவே எதிர்பார்ப்பு அதிகமாக இல்லாத நேரத்தில் கிடைக்கிற சில விஷயங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். அப்படிதான் இந்திய அணியின் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த ஆல் டைம் ஃபேவரைட் மொமண்ட்!
![2007 t20 worldCup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4540182_celeb.jpg)
முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றோடு நடையைக் கட்டிய இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
இதனால், இந்தத் தொடர் இரண்டு அணிகளின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றியமைத்தது. மேற்கூறியதை போலவே எதிர்பார்க்காத சில விஷயங்கள் நம்மை ஏமாற்றாமல் நடந்தால் அது நமது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்யும். செப்டம்பர் 24, 2007இல் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்தப் போட்டியை எதிர்பார்த்துதான் இருந்தனர்.
![2007 t20 worldCup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4540182_c.jpg)
பயிற்சியாளரே இல்லாமல் கலந்துகொண்ட இந்திய அணியை நீள முடியுடன் தோனி வழிநடத்தினார். சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் ஆகியோர் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும்கூட இந்த ஃபார்மெட் அவர்களுக்கு புதிது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் வயது ஆவரேஜ் இந்தத் தொடரில் 27தான்.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுக்க இந்திய அணியில் உத்தப்பா, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் கையை விரித்தனர். இருப்பினும், மறுமுனையில் போராடிய கவுதம் கம்பிர் 75 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 157 ரன்கள் என்ற கௌரவ ஸ்கோரை எடுத்தது.
![2007 t20 worldCup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4540182_gau.jpg)
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோஹைல் தன்வீர் வீசிய 20ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை, ரோகித் ஷர்மா லாங் ஆன் திசை நோக்கி அடித்தார். அப்போது ஃபீல்டிங் செய்திருந்த முகமது ஹஃபிஸ் அந்த கேட்சை விட்டதால், அது சிக்சருக்கு சென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் எப்படி ஒரு ரன் அவுட்டை சுற்றியே இறுதிப் போட்டி தீர்மானிக்கப்பட்டதோ அதுபோல இந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியையும் ரோகித் ஷர்மாவின் சிக்சர்தான் தீர்மானித்தது.
இதனையடுத்து 158 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்துகளில் ஆறு ரன்கள் தேவை. முன்னதாக, அதே ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, ஜோகிந்தர் ஷர்மா முதல் பந்தை ஒயிடாக வீசினார்.