நடிகை ஷாமிலி சுகுமார் சின்னத்திரையில் பிரபலமான தொடர்களான ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்துவருகிறார். இது மட்டுமல்லாமல் சில திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வது வழக்கம்.
இதற்கு ஏராளமான லைக்குகள், கமெண்டுகள் வருவதுண்டு. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவருடன் ஷாமிலி சுகுமார் நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் (பிப்.9) ஷாமிலி சுகுமார் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டு, அதில் ஷாமிலியை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டன. அதில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டன.

தகவலறிந்த நடிகை ஷாமிலி, தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்.18இல் தொடங்குகிறது!