அஜித்குமார் நடித்த விவேகம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருந்தார். இப்படத்தை வெளிநாட்டில் திரையிடுவதற்காக வெளிநாட்டு விநியோக உரிமையும் வழங்கப்பட்டது. அதன்படி மலேசியாவில் விவேகம் படத்தை திரையிட மலேசிய டி.எஸ்.ஆர். நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் தியாகராஜன் விநியோக உரிமை வழங்கியுள்ளார். ஆனால், அந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டு தியாகராஜன் மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளித்திருந்தது.
அந்தப் புகாரில் 4.25 கோடி ரூபாய் தங்களிடம் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனத்திற்கு உரிமையை வழங்கிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கு அப்போதே இரு தரப்பினரிடையே விசாரித்து தீர்க்கப்பட்டது எனக் கூறப்படுகிது.
ஆனால் தற்போது அதே மலேசிய நிறுவனம் சென்னை காவல் ஆணையர் வழக்குப்பதிவு செய்து முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், தயாரிப்பாளர் தியாகராஜன் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முகாந்திரம் உள்ளதா? என்ற அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சேர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஆணையரை நேரடியாக சந்தித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 2017ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டபோது காவல் துறையினர் இந்தப் புகாரை விசாரித்து முடித்து விட்டதாகவும், வேண்டுமென்றே மலேசிய நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் விசாரிக்க உத்தரவு பெற்றிருப்பதாகவும் தெரிவித்து பொய்யான குற்றச்சாட்டை கூறி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், இதற்கான ஆதாரங்களையும் சென்னை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'விவேகம்' பட உரிமை விவகாரம்; தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு