சென்னையில் தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திரைப்பட விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து, அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 விழுக்காடு டிடிஎஸ் (TDS) வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். கோரிக்கை வலியுறுத்தும் விதமாக, வரும் 27ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீத வரியுடன், கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்பிடி (LBT) 8 சதவீத கேளிக்கை வரி செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது.
இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைகிறது. எனவே எல்பிடி வரியை 8 சதவிகிதத்தை முற்றிலும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹோலிக்கும் எனக்கு ஆகவே ஆகாது - தீபிகாவை சங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம்