'36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய 'சூரரைப் போற்று' திரைப்படம் வரை 2டி நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது இந்நிறுவனம் 14ஆவது தயாரிப்பை அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று (ஜன. 31) ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துக்கொண்டனர்.
இந்தப் படத்தில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, பலரது மனதிலும் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் இணைந்து வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.
தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
இதையும் படிங்க... செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் அறிவிப்பு?