செல்வராகவன்-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே. திரைப்படம் வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவருகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் சூர்யா இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தில் ஆர்யா, மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 38' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இதில், சிவகுமார், நடிகர் கார்த்தி, காளி வெங்கட், நடிகை அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுதா, திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். 'சூர்யா 38' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்கப்படுகிறது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நடிகர் சூர்யா, இயக்குநர் சுதாவுடன் ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.