தமிழில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து 'நீர் பறவை', 'வம்சம்', உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்புத் திறன்மிக்கவர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர்.
கடந்த ஆண்டு வெளியான 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படத்தின் ஒரு பகுதியில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் சுனைனா ரசிகர்கள், விமர்சகர்கள் என இருதரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில், சுனைனா நடிப்பில் 'டிரிப்' திரைப்படம் வெளியானது. தற்போது அவரிடம் தெலுங்கு திரைப்படத்திலும் தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சுனைனா திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் வதந்தி என சுனைனா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடிவருகின்றன.
பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. சில இயக்குநர்கள், என்னை மனத்தில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது.
நான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி. திருமணம் செய்துகொள்ளும் திட்டம் தற்போது இல்லை. திரை வாழ்க்கையில் இன்னும் நிறைய கவனம் செலுத்தவுள்ளேன்" என்றார்.