சென்னை: நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அடாவடி உள்பட பல திரைப்படங்களைத் தயாரித்தவர் சரவணன். இவர் தற்போது தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை வைத்து தண்ணி வண்டி என்ற படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியானது. படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் தம்பி ராமையா கலந்துகொள்ளாத காரணத்தினால்தான் படம் நஷ்ட அடைந்துள்ளதாகவும், அதற்குண்டான இழப்பீட்டுத் தொகையை தனக்குத் தர வேண்டும் எனத் தயாரிப்பாளர் சரவணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த தயாரிப்பாளர் சரவணன், "நான் நான்கு கோடி ரூபாய் செலவில் தண்ணி வண்டி என்ற படத்தைத் தயாரித்துள்ளேன். படத்தின் தந்தை கதாபாத்திரத்திற்கு நடிகர் தம்பி ராமையாவை ஒப்பந்தம் செய்தேன். பின்னர் கதாநாயகன் தேர்வை நடத்தியபோது தனது மகன் உமாபதியைக் கதாநாயகனாக வைத்து படத்தை எடுக்குமாறு, தம்பி ராமையா கூறினார்.
மேலும் படத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், புரமோஷன் பணிகளிலும் ஒத்துழைப்புத் தருவதாக தம்பி ராமையா என்னிடம் கூறினார். அதை நம்பி உமாபதியை கதாநாயகனாக வைத்து தண்ணி வண்டி படத்தை எடுத்தேன்.
பின்னர் படம் முடிந்த பின்பு வில்லி கதாபாத்திரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் இருப்பதாகவும், தனது மகனுக்கு முக்கியத்துவமில்லை எனக் கூறி தம்பி ராமையா பட புரமோஷனுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார்.
இதனால் பட வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. அதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டேன். அவர் புரமோஷன் பணிக்கு வராத காரணத்தினால் 2.5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக தம்பி ராமையா எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாயகனான அறிமுகமாகும் ப்ரஜின்