மணிரத்னம் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவுக் கதையான 'பொன்னியின் செல்வன்' கதையை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும், அவ்வப்போது படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி மணிரத்னம் ரசிகர்களையும் 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திவருகிறது. இதுவரை விக்ரம், மோகன்பாபு, கார்த்தி, அமலா பால், அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இத்தகவலை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தற்போது பார்த்திபன் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற விவாதம் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மத்தியில் நடந்துவருகிறது. பெரிய பழுவேட்டையார் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றே நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.