சென்னை: சினிமா உலகில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு தாதா சாகிப் பால்கே விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இதற்காக பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் வாழ்த்துப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
கமல் தனது வாழ்த்தில் "திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது உள்குத்தாக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. சிறப்பாக நடிக்காமல், திரையில் தோன்றுவதன் மூலம் மட்டுமே ரஜினி விருதை வென்றுவிட்டார் என்கிற உள்அர்த்தம் கமல்ஹாசன் வாழ்த்தில் இருப்பதாகவும், ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளார் என்றும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்தபோது "திரையில் தோன்றுவதன் மூலமே என குறிப்பிட்டிருப்பது, 'திரைக்குப் பின்னால் இயக்குநர், கதாசிரியர், பாடகர் என மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் இல்லாமல் நடிப்புக்காக மட்டுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்து, இப்போது இவ்விருதும் வென்றிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது' என்கிற அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள் அர்த்தமோ, தவறான அர்த்தமோ எதுவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.