இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வசந்தபாலன். ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இவர் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி. பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
தற்போது, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.
அதில் ஒருவரான வரதராஜன், வசந்தபாலனுடன் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர், நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்.
இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயர் அலுவலராக உள்ளார். மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உப பொருள்களை சிறியதாக விற்கத்தொடங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.
விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படும். தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... இப்படி மட்டும் நடந்தால் நான் நடிப்பதையே விட்டுவிடுவேன் - சத்தியம் செய்யும் மோகனால்