மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் அலிகான், அபி சரவணன், சண்டை கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ், இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், எத்தனை ஆண்டுகள்தான் சாதியை பேசுவார்கள். சாதி இல்லையென்றால் இட ஒதுக்கீட்டை கேட்க முடியாது. அனைவரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்ல முன்வர வேண்டும். சாதி உணர்வில் இயக்குநர்கள் குழுவாக சேருகிறார்கள் என்றாலும் அதை நம்மால் தடுக்க முடியாது.
நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது. வெளிமாநிலங்களில் படம் எடுக்காமல் இங்கேயே படப்பிடிப்புத் தளத்தை அமைக்க வேண்டும். ஐதராபாத்தில் ராமோஜிராவ் தளத்தின் வெளியேதான் செட் அமைத்து 'வலிமை' படத்தை எடுக்கிறார்கள். அந்த செட்டை இங்கேயே அமைக்கலாம். சண்டைக் கலைஞர்களும் வெளியில் இருந்து அழைத்து வருகிறார்கள். இங்கிருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்றார்.