இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இந்த புதிய சங்கத்திற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பத்திரிகையாளரைச் சந்தித்த அவர்கள், "தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் பாரதிராஜா தாமாகவே ஒரு புதிய சங்கத்தை உருவாக்கும் செயல்களில் ஈடுபட்டு இருக்கமாட்டார். புதிய தயாரிப்பாளர் சங்கம் அவர் தொடங்கினாலும்; அதனால் அவருக்குக் கிடைத்தது வேதனை மட்டுமே. நான்கு பேர் கொண்ட குழு சேர்ந்து பாரதி ராஜாவைச் சூழ்நிலைக் கைதியாக மாற்றிவிட்டனர்.
தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை குறித்து அனைவரிடமும் கலந்து பேசி முடிவு செய்கிறேன் என்று தான் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அடுத்து ஒரு கும்பல் அவரைச் சந்தித்துப் பேசி, புதிய சங்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்திரப் பதிவுத் துறை அலுவலருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளோம்" என்றனர்.
அந்த மனுவில், "இயக்குநர் பாரதிராஜாவுடன் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கப் பத்திரப்பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை தனி அதிகாரி பொறுப்பை ஏற்று நடத்தி வரும் நிலையில், தனி அதிகாரி சிறப்பாகச் செயல்படவில்லை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, புதிய சங்கத்தை உருவாக்கி இருப்பது சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை.
எனவே பாரதி ராஜாவையும், அவருக்குத் துணையாக உள்ளவர்களையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.