சென்னை: என்னுடைய கனவு படமாக திகழும் ஆக்ஷன் படத்தில் ராணுவம், பயங்கரவாதம், அரசியல், காமெடி என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன என இயக்குநர் சுந்தர். சி கூறியுள்ளார்.
விஷால் - தமன்னா நடிப்பில் இயக்குநர் சுந்தர். சி இயக்கியிருக்கும் 'ஆக்ஷன்' திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதனிடையே படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் கலந்துகொண்டு படம் குறித்து பேசினர்.
இதையடுத்து இயக்குநர் சுந்தர். சி பேசியதாவது:
ஆக்ஷன் என்னுடைய கனவுப் படம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் . அந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? இந்தக் கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்தப் பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.
சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். நடிகைகள் தமன்னா, அகன்ஷா ஆகிய இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள்.
இந்தப் படத்தில் எனக்கு பக்கபலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற சண்டை பயிற்சியாளர்களான அன்பு - அறிவு ஆகிய இருவரும்தான். படத்துக்கு இசை ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் அவருக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தனது பணியை முடித்துவிட்டார் ஆதி. எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன்.
ராணுவம், பயங்கரவாதம், அரசியல் என்று அனைத்தும் படத்தில் இருக்கிறது. மேலும், வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பதுதான் சஸ்பென்ஸ். படத்தின் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணி செய்த அனைவருமே சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்தான்.
விஷால் இயக்குநரின் நடிகர். அவரை ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்கச் சொன்னேன். உடனே குதித்துவிட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.