இயக்குநர் ஷங்கர் தற்போது கமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கிவந்தார். ஆனால் கரோனா பாதிப்பு படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் 50ஆவது படமாக இது உருவாகிறது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படமொன்றை இயக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக் எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'அந்நியன்' படம் வெளியாகி வரவேற்பு பெற்றபோது இதன் ரீமேக் குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தச் சமயத்தில் பேச்சுவார்த்தை இறுதிபெறாததால் தற்போது இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக அர்ஜுன் நடிப்பில் வெளியான 'முதல்வன்' படத்தை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் படமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.