தெலங்கானா மாநிலம், சைபராபாத்தில் வசித்துவரும் பஞ்சங்கம் சலபதி என்பவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”எனது மகனுக்குத் திருமணம் முடிந்தது குறித்து அறிந்து கடந்த 25ஆம் தேதி இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களுடன் என் வீட்டிற்கு வந்த எட்டு திருநங்கைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர்.
ஆனால், நான் பணம் தர மறுத்ததால், என்னையும் எனது குடும்பத்தையும் ஆபாச வார்த்தைகளால் அவர்கள் திட்டினர். தொடர்ந்து, 16 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை நான் கொடுத்தேன். என்னை மிரட்டி, ஆபாச வார்த்தைகளால் திட்டி பணம்பறித்த அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபராபாத் காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு திருநங்கைகள், இரண்டு ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து இதுபோன்று சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று பணம் பறித்துவருவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...தாம்பரம், செல்போன் திருடிய இளைஞர் கைது!