சேலம் கிச்சிபாளையம் சுந்தரர் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை(34). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தி விற்று வந்த செல்லதுரை, அதன் பிறகு அடியாட்களை சேர்த்துக்கொண்டு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது, பிரபல ரவுடி நெப்போலியனை கொலை செய்த வழக்கு, மேலும் இரண்டு கொலை முயற்சி, ரேஷன் அரிசி கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லதுரை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து, குண்டர் சட்டம் செல்லாது என செல்லதுரை வழக்கு தொடர்ந்ததால், குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த அவர், வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனிடையே, அம்மாபேட்டையில் உள்ள தனது வழக்கறிஞரை பார்க்க நேற்று (டிசம்பர் 22) இரவு செல்லதுரை சென்றார். அப்போது, கிச்சிப்பாளையம் குப்பை மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த இரண்டு கார்கள் செல்லதுரையின் காரின் முன்புறமும் பின்புறமும் மோதின.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்லதுரை, காரிலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், ஆறு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தி, வீச்சரிவாளால் செல்லதுரையின் தலை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர், செல்லதுரையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், செல்லதுரையின் கூட்டாளி ஜான் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஜான் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.