பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலுள்ள நடைமேடையில் பலூன் வியாபாரம் செய்யும் பாட்ஷா - சினேகா தம்பதியின் ராஜேஸ்வரி என்கின்ற 8 மாத குழந்தையை கடத்தல் கும்பல் கடத்திச் சென்றனர். முதற்கட்டமாக கணவன் மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக சினேகா குழந்தையுடன் பெசன்ட் நகர் கடற்கரை நடைமேடையில் தனியாக உறங்கியதாகவும், குழந்தை காணாமல் போனதை அறிந்தவுடன், கணவன்தான் குழந்தையை கடத்திச் சென்று இருப்பார் என்று நினைத்திருக்கிறார்.
அத்தருணத்தில் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை ஆராய்ந்தபோது 3 பெண், ஒரு ஆண் சேர்ந்து குழந்தையை ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படக்கருவியின் (CCTV) பதிவுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், நெசப்பாக்கம் பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் கடத்தல் கும்பல் இறங்கியது உறுதியானது.
17 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து உயிருடன் எரித்த கொடூரம்!
இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தும்போது, குழந்தையானது, விஜயா என்ற பெண்ணின் கட்டுப்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்ட காவல்துறையினர், அந்தப் பெண்ணையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![8 month old child kidnapped, chennai child kidnap, kidnapped child rescued in chennai, child rescued in 24 hours, சென்னை குழந்தை கடத்தல், 24 மணிநேரத்தில் குழந்தை மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6249537_chennai-child-kidnap-acquit.jpg)
தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டு, தனது தோழியின் நண்பர் மணிகண்டன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், தனது அலுவலக தோழியான விஜயா என்பவர் மூலம் குழந்தை தத்தெடுப்பது தொடர்பாக பேசியுள்ளார். விஜயா அவரது உறவினர் திருப்பதி அம்மாள் என்பவரிடம் தெரிவித்தபோது, குழந்தையை கடத்தி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
மயிலாப்பூரில் நடிகையை மிரட்டிய தந்தை-மகன் கைது
சைதாப்பேட்டையைச் சேர்ந்த திருப்பதி அம்மாள் அவரது மகள் பாலவெங்கம்மாள், கூட்டாளிகள் மேரி அவரது மகன் ரூபன் ஆகியோர் குழந்தையை கடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இதனையடுத்து நான்கு பேரும் பெசன்ட் நகர் கடற்கரையில் நோட்டம் விட்டுள்ளனர். அப்போது தனியாக உறங்கிக்கொண்டிருந்த சினேகாவையும், அவரது 8 மாத குழந்தையை பார்த்துள்ளனர். இதனையடுத்து இந்த கும்பல் 8 மாத குழந்தையை கடத்தியுள்ளனர்.
இதற்காக இரண்டேகால் லட்சம் ரூபாய் பணம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன், திருப்பதி அம்மாள், பால வெங்கம்மாள், மேரி, ரூபன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒண்ணேகால் லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் குழந்தைக்கு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, அடையாறு துணை ஆணையர் பகலவன் முன்னிலையில், குழந்தையை பெற்றோரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேசிய மாநகர துணை ஆணையர் பகலவன், “குழந்தை கடத்தப்பட்ட பின்பு 4 தனிப்படை அமைத்து, 24 மணி நேரத்தில் மீட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. பெற்றோர்கள் குழந்தையை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். இதற்காக உழைத்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
குழந்தையின் தந்தை கூறுகையில், “குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து தான் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாகவும், பின்னர் காவல்துறை அளித்த உறுதிமொழியை அடுத்து பொறுமையாக காத்திருந்தேன். அவர்கள் கூறியது போல் என் குழந்தையை மீட்டுத் தந்துள்ளனர். அவர்களுக்கு என் மன்மார்ந்த நன்றிகள்” என்று கூறினார்.