ஆந்திரா: நுவ்வலரேவு கிராமத்தில் வசிக்கும் கேவதி சமூக மக்கள் காலம் காலமாக திருமண நிகழ்வில் விநோத நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். 500 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ளூர் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இடையே தான் எப்போதும் திருமணங்கள் நடைபெறும்.
காரணம் , கிராமப்பெண்களை வேறு கிராமங்களுக்கு அனுப்புவதை கிராமத்து பெரியவர்கள் விரும்புவதில்லை. கிராம முன்னோர்கள் ஆரம்பித்த இந்த நடைமுறை நூற்றாண்டுகளை கடந்தும் பின்பற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு திருமணங்கள் நடைபெறும். அதுவும் குறிப்பாக ராம நவமிக்குப் பிறகு வரும் முகூர்த்தத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படும். அத்திருமணங்களில் மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டிவிடுகின்றனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தற்போது 45 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் சற்று விநோதமாக பிருந்தாவதி தெய்வத்தை வணங்கி, மணமகள்கள் மணமகன்களுக்குத் தாலி கட்டினர். திருமண நிகழ்வால் கிராமமே விழாக்கோலமாக காட்சியளித்தது. அடுத்த திருமண நிகழ்வு 2024இல் நடைபெறும் என கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'வேட்டியில் மணமகள்.. வெட்கத்தில் மணமகன்..' - ஆந்திராவில் வினோத திருமணம்