ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்துவருகிறது. இருதரப்புக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர். குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று ஆப்கானிஸ்தான், ஈரானிய அலுவலர்கள் புத்தக கண்காட்சியைத் திறந்துவைத்தனர். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்தபோது திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பின்னர் அவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் காபூல் பல்கலைக்கழகத்துக்கு விரைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதேபோல், காபூலில் கவாஜா சப்ஸ் போஷ் பகுதியில் இன்று (நவ. 02) காலை 7.35 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என உள்ளூர் டோலோ ஊடகம் தெரிவித்துள்ளது.