உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இஸ்தான்புல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கியின் சாரியர் மாவட்டத்திலுள்ள டெடெமன் மசூதி தற்போது சூப்பர் மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் யாரும் எந்த பொருள்களை வேண்டுமானாலும் விட்டுச் செல்லாம். ஆனால் இங்குள்ள பொருள்கள் எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை.
இது குறித்து மசூதியின் இமாம் அப்துல்சமத் காகீர் கூறுகையில், "துருக்கியின் மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டவுடன் ஏழைகளுக்குத் தேவையான பொருள்களை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. அதன்பிறகே மசூதியை இப்படி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றினேன்" என்றார்
அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுபவர்கள் மசூதியிலுள்ள ஏட்டில் தங்கள் பெயரையும் தொலைபேசி எண்ணையும் எழுத வேண்டும். அந்தத் தகவல்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு உண்மையாகவே உதவி தேவையா என்பதை உள்ளூர் நிர்வாகத்தினர் உறுதி செய்வார்கள்.
அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு 15 பேர் வீதம் மசூதிக்கு அழைக்கப்படுவர். அங்கு சமூக விலகல் முறையாகப் பின்பற்றப்பட்டு, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும். ஒரு நபர் ஒரு சமயத்தில் எட்டு பொருள்கள் வரை பெறலாம்.
இந்தச் சேவையை இரண்டு வாரங்களாக செய்துவருகிறோம். தினசரி 120 பேரை அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்ள மசூதிக்கு அழைக்கிறோம். இதுவரை 900க்கும் மேற்பட்டோர் இங்கிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். நாங்கள் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எங்களுக்கு உதவ விரும்புபவர்கள் பொருள்களை எங்களுக்குத் தந்து உதவலாம்", என்றார்.
இதையும் படிங்க: சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?