மும்பையில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவையே உலுக்கிய இந்த பயங்கர சம்பவத்தில் 170க்கும் மேற்பட்ட இந்திய, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
மும்பைத் தாக்குதலில் நல்வாய்ப்பாக உயிர்ப்பிழைத்த மோஷி ஸ்வீ ஹோல்டஸ்பெர்க் (Moshe Tzvi Holtzberg) என்ற சிறுவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
நவம்பர் 27ஆம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "சிறுவன் மோஷி, அவரது குடும்பத்தார் நலமுடன் இருக்க இந்திய மக்களின் வேண்டுதல்கள் உள்ளன.
உங்களது வாழ்க்கை அனைவருக்கும் ஊக்கமளித்து வருகிறது. மும்பைத் தாக்குதல் போன்ற கொடூரச் சம்பவத்தில் நீங்கள் உயிர்ப் பிழைத்ததே ஆச்சரியத்திற்குரிய ஒன்று. இது அனைவரின் மனதிலும் நம்பிக்கையை விதைக்கிறது.
கோழைத்தனமாக இத்தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகளால் வெல்ல முடியவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், உத்வேகத்தையும் ஒடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டனர்.
பிரதமர் பெஞ்சமின் நதென்யாகுவுடன் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மும்பையில் உள்ள சப்பாத் ஹவுஸுக்கு (Chabad House) நீங்கள் வருவீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.