கரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றிபெற்ற முதல் நாடாக ரஷ்யா தன்னை அறிவிக்கவுள்ளது. கரோனா தடுப்பூசி சோதனையில் உலக நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கமேலியா நிறுவனம், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து, தடுப்பூசி பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்தினர் பலர் சோதனை முயற்சிக்கு உட்படுத்திக் கொண்டதாகவும், அவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் கூறியது.
இந்நிலையில், வரும் 12ஆம் தேதி (ஆகஸ்ட் 12) உலகின் முதல் கரோனா தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்யவுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மைக்கேல் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் எனவும், இது தொடர்பான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை ரஷ்யாவின் இந்தக் கூற்றுகளை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஐயத்துடனே பார்க்கின்றன. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தடுப்பூசியை அமெரிக்கா பயன்படுத்தப்போவதில்லை என அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணர் அந்தோணி பௌசி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: 57 செயற்கைகோள்களுடன் வானில் சீறி பாய்ந்த அமெரிக்க ராக்கெட்!