ஈரான் வழியாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்ததாக இந்திய கப்பல் படையைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனிடையே, இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவுக்கு தண்டனை அளிக்கக் கூடாது என அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குல்பூஷன் ஜாதவ் வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற்றது. அப்போது, 'குல்பூஷன் ஜாதவ் குறித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை சந்தேகத்திற்குரியதாக உள்ளது, எனவே அவர் மீதான மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கியது. அதில், குல்பூஷனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு தடைவிதித்தும், தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
