ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. இன்று (ஜன. 07) மட்டும் சுமார் 2,447 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அங்கு கரோனா பரவலைத் தடுத்திட அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிவரை அவசரநிலை அமலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உத்தரவின்படி, உணவகங்கள், மது விடுதிகள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும். உடற்பயிற்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள் குறைந்த நேரம் மட்டுமே செயல்பட வேண்டும். அலுவலகங்கள் 70 விழுக்காட்டிற்கு குறைவான ஊழியர்களுடன் செயல்பட வேண்டும். நிகழ்ச்சிகளில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜப்பான் நாட்டில் டோக்கியோ உள்பட ஆறு மாகாணங்களில் ஏப்ரல் 2020இல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அதிகப்படியான தளர்வுகளுடன் டோக்கியோவில் மட்டும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 609 பேர் உயிரிழந்துள்ளனர்.