சீனாவின் சிறப்புப் பிராந்தியங்களுள் ஒன்றான ஹாங்காங் நகரம், கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க அதன் எல்லையை மூடிவைத்துள்ளது.
இந்நிலையில், ஹாங்காங்கில் தற்போது கோவிட்-19 நோய்ப் பரவல் பெருமளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் எல்லைகளைத் திறந்துவிடுமாறு சீன அரசு தொடர்ந்து அழுத்தம் தந்து வருவதாக அந்நகர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன சுற்றுலாச் சேவை முகமையத்தின் இயக்குநரும், ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ சீ-விங் கூறுகையில், "பயணத் தடைகளை படிப்படியாகத் தளர்த்துவது குறித்து ஹாங்காங் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
வர்த்தகம், குடும்பத்தினரைப் பார்க்க ஹாங்காங்கிற்கு அடிக்கடி வரும் நபர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஹாங்காங் அலுவலர்கள், சீன அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார்.
இதனிடையே, ஹாங்காங்குடன் எல்லையைப் பகிர்ந்துள்ள ஷான்ஸென் மாகாண அரசு, "வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்" என அறிவித்துள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த ஹாங்காங் அலுவலர் ஒருவர், "ஹாங்காங் அதன் எல்லைகளைத் திறந்துவிட்டால், அதனையே சீனா மேற்கொள்ளும் என சொல்ல முடியாது.
இந்த விஷயத்தில் இருதரப்பு அலுவலர்களும் ஆலோசனை மேற்கொண்டு ஒரே முடிவுக்கு வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் இதுவரை ஆயிரத்து 37 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஹாங்காங் விமான நிலையத்தில் கிருமி நாசினி தொழில்நுட்பங்கள் !