உலக அளவில் பருவநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழலை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருந்துவருகிறது. ஆனால் தற்போது பெருகிவரும் தொழிற்சாலைகளாலும், வாகனங்களாலும் காற்று, தண்ணீர் என மனிதனின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நாசமாகிவருகின்றன.
இதன் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் என பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம் காரணமாக கடல் மட்டமும் உயர்ந்துவருகிறது. இந்த சுற்றுச்சூழல் மாற்றத்தையும், மாசுவையும் தடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இருந்தபோதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாததால், பாதிப்புகள் அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், விரைவில் ஐக்கிய நாடுகளின் மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி உலக முழுவதிலும் வெள்ளிக்கிழமை (இன்று) உலக பருவநிலை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி உலகம் முழுவதிலும் 110 நகரங்களில் இந்த பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளிப்பாட்டை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஐக்கிய நாடுகள் தலைவர்கள் கலந்தாலோசித்து பருவநிலை மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.