கடந்தாண்டு சீனாவிலுள்ள வூகான் நகரில் கரோனா தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸை அமெரிக்க அதிபர் சீனா வைரஸ் என்று ஒருமுறை குறிப்பிட்டார். இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச்சூழ்நிலையில், வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய்வதற்காக உலக நாடுகளின் ஒப்புதலுடன் உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் வைரஸின் தடத்தை அறிய ஐ.நா.வின் அலுவலர்கள் இருவர் சீனா சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்பு குறித்து சீன அரசாங்கம் கலந்தாலோசித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்க் வென்பின் ஊடகங்களிடம் பேசுகையில், வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான ஆயத்த ஆலோசனைகள் ஐ.நா. அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முழு விசாரணை நடைபெற இந்த பெருந்தொற்று கட்டுக்குள் வரவேண்டும் என குறிப்பிட்டுள்ள சீனா அரசு, முதன் முதலில் தொற்று கண்டறியப்பட்டபோது உடனடியாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பணியமர்த்தக் கூடாது' - ட்ரம்ப்பின் புதிய உத்தரவு!