நியூயார்க்கில் கடந்த வாரம் முதல் 74ஆவது ஐநா பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை அன்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றினார். அவருடன் அதிபர் ட்ரம்ப்பும் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஹவுடி மோடி!: ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த மோடி...! - ஆர்ப்பரித்த மக்கள்
இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஏற்பாட்டின் பேரில் ஐநா பொதுக்கூட்டத்தையொட்டி நேற்று திங்கள்கிழமை பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்தது.
இந்தியா சார்பாக இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, "பருவநிலை மாற்றம் குறித்து பேசிவருவதற்கான காலம் கடந்துவிட்டது. இது செயல்படுவதற்கான காலம். 2022ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் இந்தியாவில் 175 ஜிகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம். இதனை 450 ஜிகா வாட்டாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விரிவான அணுகுமுறை தேவை என்பதால், உலகளாவிய மக்கள் இயக்கம் அவசியம்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம். உயிரி - எரிபொருள் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கவுள்ளோம். 15 ஆயிரம் குடும்பங்களுக்குத் தூய்மை சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மழைநீரைச் சேகரிக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிகளை ஒழிக்க மக்கள் இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்க சர்வதேச சூரிய மின் உற்பத்தி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்தியா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் 80 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பேரிடர்களை எதிர்கொள்ள 'சர்வதேச பேரிடர் மீள்கட்டமைப்புக் கூட்டணி'யை (International Coalition for Disaster Resilient Infrastructure) உருவாக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதில் உலக நாடுகள் இணைய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.