சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம், பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நோயால் உலகளவில் இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து வேறொரு விலங்கு விழியாக மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும், இந்தப் பரவல் வூஹானில் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையில் நடந்திருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் வாதமாக உள்ளது.
ஆனால், இந்த கரோனா வைரஸ் வூஹான் தீநுண்மியல் ஆய்வுக்கூடத்திலிருந்து பரவியதாகவும், அதற்குத் தன்னிடம் போதிய ஆதாரம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னணி பெருந்தொற்று நிபுணரும், NIAID அமைப்பின் இயக்குநருமான ஆன்டோனி ஃபௌசி, "வௌவால்களின் உடலில் இருக்கும் வைரஸ்களின் பரிமாண வளர்ச்சியைப் பார்க்கும்போது, இந்த வைரஸ் ஆய்வுக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டதற்கு வாய்ப்பே இல்லை.
இது முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று. இதனை ஏராளமான பரிமாண வளர்ச்சி உயிரியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளவில் கரோனா தாக்கம் எத்தனை காலம் நீடிக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அதுகுறித்து தற்போது கருத்து கூற முடியாது என்றும், வைரஸ் விரைவில் மாயமாவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : சீனாவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயமா?