வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பேசினார். இருவரும், கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது உள்ளிட்ட அவசர உலகளாவிய சிக்கல்களில் தங்களது கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசியுள்ளனர்.
எதிர்காலப் பொதுச்சுகாதாரத்தை எதிர்கொள்ளுவது, காலநிலை மாற்றம் அச்சுறுத்தலை எதிர்கொள்வது, பாதுகாப்பு, அமைதியை நிலைநிறுத்துவது, ஜனநாயகம், மனித உரிமைகளை மேம்படுத்துவது, மோதல்களைத் தீர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.
மேலும், அர்ஜென்டினாவின் அதிபர், ஆல்பர்டோ பெர்னாண்டஸுடன் பேசிய ஜோ பைடன், கோவிட்-19ஐ எதிர்கொள்வது, உலகப் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
இதேபோல், லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டா ரிசா நாட்டின் பிரதமருடனும் பைடன் பேசியுள்ளார். மனித உரிமைகள், கோவிட்-19ஐ கையாளுவது, காலநிலை மாற்றம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவதாக அந்நாட்டு அதிபரைப் பாராட்டியுள்ளார்.
கென்யாவின் ஜனாதிபதி கென்யாட்டாவுடன் தொலைபேசி அழைப்பில் பேசிய பைடன், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலைக் கையாளுவது, அகதிகளின் வாழ்வு, பிராந்தியப் பாதுகாப்பு போன்றவற்றிலுள்ள சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் கூட்டாண்மையை வளர்ப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா? - எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்