உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது கோவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்நிலையில், தற்போது உலகில் பரவும் கோவிட்-19 போல வருங்காலங்களில் பெருத்தொற்றுகள் பரவாமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தொற்று ஏற்படும் அபாயங்கள் குறித்தும் வரைபடம் ஒன்றை உருவாக்க ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பு தற்போது அறிவித்துள்ள திட்டங்கள் நான்கு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.
- கோவிட்-19 தொற்றால் உண்டாகும் கழிவுகளை நிர்வகிப்பது
- இயற்கைக்கும் மக்களுக்கும் தேவையான மாற்றத்தை வழங்குவது
- எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டங்களை அறிவிப்பது
- சுற்றுச்சூழல் நிர்வாகத்தை நவீனமயமாக்குவது
இதுகுறித்து இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் கூறுகையில், "மனிதர்கள் மாற வேண்டும் என்ற எச்சரிக்கையை நமக்கு இந்த கோவிட்-19 வழங்கியுள்ளது. ஊரடங்கு என்பது தற்காலிகத் தீர்வு மட்டுமே. அதை நீட்டிக்க முடியாது. உலக நாடுகளின் வளர்ச்சியை உறுதிசெய்ய இயற்கையுடன் இணையும்போது கிடைக்கும் பொருளாதாரம் மிக முக்கியமானது.
உலக நாடுகளுக்குத் தேவையான உதவிகளை ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு வழங்க தயாராக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பல்லுயிர்களையும் மீட்டுடெக்க வேண்டும். மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி மாசுகளைக் குறைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கடன் தொகையை நிறுத்தி வைக்கக்கோரி 90% வாடிக்கையாளர்கள் விண்ணப்பம்!