சென்னை: தமிழ் சினிமாவில் வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் காலங்களில் வரலாறு படங்களே தமிழில் அதிகம் எடுக்கப்பட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா வேறு வழியில் பயணிக்கத் தொடங்கியது. தற்போது மீண்டும் வரலாற்றுப் படங்களின் பக்கம் தமிழ் இயக்குநர்கள் பார்வை திரும்பி உள்ளது. அதற்கு முதல் காரணமாகப் பொன்னியின் செல்வன் படத்தைச் சொல்லலாம்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இதன் முதல் பாகம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டாம் பாகம் இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் யாத்திசை என்ற வரலாற்று திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. ஒரு புதுமுகங்களின் திரைப்படத்தின் ட்ரெய்லர் இத்தனை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது ஆச்சரியம் தான்.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள யாத்திசை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் தரணி இராசேந்திரன், பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி தயாரிப்பாளர் கே ஜே கணேஷ், நடிகை சுபத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசுகையில், ”4 வருடத்திற்கு முன்பு இந்த கதையை ரெடி பண்ணி தயாரிப்பாளரிடம் கொடுத்தேன். இந்த தயாரிப்பாளர் தவிர்த்து மற்ற யாரும் இந்த கதையைப் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். இது எங்கள் கனவு படம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். நாங்கள் பொன்னியின் செல்வன் உடன் போட்டியிடவில்லை. அது வேறு ஒரு படம். நாங்கள் வேறு ஒரு படத்தை உருவாக்கி உள்ளோம்” என்றார்
விநியோகிஸ்தர் சக்திவேல் பேசுகையில், ”யாத்திசை எனக்கான பெருமை. எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் நிறைய படங்கள் அமைந்துள்ளது. அதே போல் ஒரு படமாக யாத்திசை இருக்கும். இந்த படத்தின் டிரெய்லர் பார்த்த பலர் என்னிடம் நிறைய பேசினர். டிரைலரில் இருப்பது போல் படத்தில் இருக்கும். இந்த படத்தில் முழுவதுமாக மிகப்பெரிய உழைப்பு உள்ளது. ரொம்ப முக்கியமான படமாக இது இருக்கும்” என கூறினார்
இதையும் படிங்க: சார்பட்டா 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் - ‘டாடி’ ஜான் விஜய்