பிரபல நடிகரும் மற்றும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் பிரபல நடிகர் சாந்தனு. இவர் சக்கரகட்டி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.சித்து ப்ளஸ் 2 , அம்மாவின் கைப்பேசி, மாஸ்டர், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இவரும், இவரது மனைவி கீர்த்தி இருவரும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து பல்வேறு போட்டோக்கள் வீடியோக்கள் பதிவிட்டு தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரையும் சமூகவலைதளத்தில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். அந்த அடிப்படையில் நடிகர் சாந்தனுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை விற்பனை செய்ய உள்ளதாக விளம்பரம் ஒன்று சமூக வளைதளத்தில் போலியாக பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். பகவதி டைமண்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மோசடி பதிவு உள்ளதாகவும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவை நீக்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் நடிகர் சாந்தனு எச்சரித்துள்ளார்.
அதிக followers உள்ள பேஸ் புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் ஆன்லைனில் டார்க் வெப் மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதன் மூலம் அந்த சமூக வலைதளப் பக்கங்களில் வாங்கி பெயரை மாற்றிக்கொண்டு சமூகவலைதளத்தில் பிரபலமாகலாம் என பலர் வாங்க முற்படுகின்றனர்.
இதுபோன்று இருப்பவர்களை ஏமாற்றும் அடிப்படையில் பிரபல நடிகர் நடிகைகளின் மற்றும் பிரபலமானவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் விற்கப்படுவதாக விளம்பரம் செய்து நூதன முறையில் மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் க்ரைம் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : வாய்தாவிற்கு மீண்டும் வாய்தா!