சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாக இருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் 'ஆண்டி- பிகிலி' என்ற ரசிகர்களைக் கவரும் சொல்லாடலும் படத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தற்போது, படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை இந்தியா முழுவதும் ஸ்டார் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், 'ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்' எனக் கூறியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன என்பதையும் கூடுதலாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு 'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்த வருடம், 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:முன்னணி நாயகர்களுக்கு கதை தேர்வு முக்கியம் - இயக்குநர் பேரரசு