மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வென்றது. இந்த இடைத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியை திமுக கைப்பற்றியது.
இந்த சட்டப்பேரவைத் தொகுதியில்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த தொகுதியை 2001ஆம் ஆண்டு முதல் அதிமுக தக்க வைத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு ஆண்டிபட்டியில் புதிதாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றதன் காரணமாக அதிமுக கட்டுப்பாட்டிலேயே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருந்து வந்தது.
20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளாக அதிமுக கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக வசம் ஒப்படைப்பதற்காக அலுவலகத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் உள்ளிட்ட கட்சி சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.