ராமநாதபுரம்: மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, பொதுத் தேர்தல் பார்வையாளர்களாக ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு சொராப் பாபு, பரமக்குடி தொகுதிக்கு விசோப் கென்யே, திருவாடானை தொகுதிக்கு அனுராக் வர்மா ஆகியோரும், காவல் பார்வையாளராக அனூப் யு செட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்கள், தொகுதிகள் வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் தற்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணிகளின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி என முறையே திட்டமிட்டு போதிய தடுப்புகள் அமைத்திடவும், போதிய கண்காணிப்பு படக்கருவிகள் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினர்.