திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வருபவர் பைனான்ஸ் அதிபர் பாலசுப்பிரமணி. இவரிடம் அறிவழகன் என்பவர் நண்பராக அறிமுகமாகி தன்னுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழில் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என கூறியுள்ளார். மேலும், தனது மனைவியின் தங்கையை பைனான்ஸ் அதிபர் பாலசுப்பிரமணியத்திற்கு திருமணம் செய்துதருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய பாலசுப்பிரமணி, அறிவழகனின் வங்கி கணக்கில் மூன்று ஆண்டுகளாக மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். மேலும், திருமணம் செய்துதருவதாகக் கூறி 50 சவரன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் திண்டுக்கல் வந்த பாலசுப்பிரமணி அறிவழகனை சந்தித்தபோது பணத்தை தர முடியாது என கூறியும் பெண்ணையும் திருமணம் செய்து வைக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாலசுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிவழகன், அவரது மனைவி, மோசடிக்கு உடந்தையாக இருந்த இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.