வேலூர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வாக்கு சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று(பிப். 10) நடைபெற்றது. அதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பேசியதாவது, கிருபானந்த வாரியர் இறந்த போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அன்று முதல் இன்று வரை அதிமுக சார்பில் அவருக்கு ஒரு மாலை கூட போடப்படவில்லை. அவர் இறந்த சமயத்தில் ஒரு அமைச்சர் கூட நேரில் சென்று மரியாதை செலுத்தவில்லை. அன்று காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட மாலை அணிவிக்கவில்லை. நாங்கள் தான் அவரை அடக்கம் செய்து விட்டு வந்தோம். இறுதிவரை அங்கு தான் இருந்தோம். ஆகவே யாரோ சொல்லி இருப்பார்கள் வாரியார் சாமிக்கு அரசு விழா அறிவித்தால் எல்லோரும் ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று, அதனால் இவர் அறிவித்து விட்டார். ஆனால் அவருக்கு உரிய மரியாதையை செலுத்தாதது அரசு அதிமுக என்றார்.
கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்த சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் படித்த வரலாற்றில், நான் அறிந்த அரசியலில் இதுவரை தண்டனை பெற்று, சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் 10 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையானவருக்கு இது போன்ற வரவேற்பு அளிப்பது, தியாகத்திற்கும், கொள்ளை கூட்டத்திற்கும் வித்தியாசமே தெரியாமல் போய்விடும்" என்றார்.
தொடர்ந்து டிடிவி தினகரனும், திமுகவும் சேர்ந்து அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர் என்று முதலமைச்சர் கூறியதற்கு பதிலளித்தவர், "திமுக, எடப்பாடியார் இருக்கும் அதிமுகவிற்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் சசிகலா வருவார் என்ற நிலையில் வீட்டிற்குள்ளேயே இருந்து மௌனம் காத்து, சபத வாழ்க்கை மேற்கொண்டு இருக்கிறாரே ஒ.பன்னீர் செல்வம் அவர் சதி செய்கிறாரா என்று காவல்துறையை விட்டு பார்க்கட்டும்" என்றார்.
முதலமைச்சருக்கு மிரட்டல் என்ற போக்கு கண்டிக்கத்தக்கது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதை கவனிக்க வேண்டும். முதலமைச்சர் தனது இலாக்காவை சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தம். தலைமை செயலக கட்டுமானத்தில் ஊழல் செய்ததாக முதலமைச்சர் பேசியதற்கு பதிலளித்தவர், 'அந்த ஊழலை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் என்ன ஆனது? வாய் புளித்தது என்று முதலமைச்சர் பேசுவது அழகல்ல. மூன்றாம் தர அமைச்சர் இது போன்று பேசலாம் முதலமைச்சர் இது போன்று பேசக் கூடாது' என்றார்.
"ஸ்டாலின் என்னிடம் மாணவனாக இருந்தவர், மிசா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதானவர். நம்முடைய முதலமைச்சர் காவல் லாக்கப்பில் என்றாவது இருந்தது உண்டா, சந்தேக கேசிலாவது உள்ளே போனது உண்டா, அவர் தியாகத்தை பற்றி எல்லாம் பேசக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க:’ஆளுநர் நாடகம் ஆடுகிறார்’ - துரைமுருகன் கண்டனம்!